February 11, 2010

திருவடிநிழல் துணையதே !

விடையுடையவன் வியனுறுவிரி சடையுடையவன் மறிமழுப்
படையுடையவன் மயலதும்நைய வயமருள்பவன் மறையறை
நடையுடையவன் அடியரிதயம் இடமுடையவன் ஒளிமலர்த்
தொடையலணியும் நயமுடையவன் திருவடிநிழல் துணையதே !


வயம்=வெற்றி
நயம்=அனுகூலம் செய்பவன்,கண்ணோட்டமுடையவன்

February 10, 2010

திருமுறை தினம் உரை!

முனிசனமுறு சமனநிலையும் அவன்செயலென அறிகுவை
நனிகனிமனந் தனில்புனைஅடி யவர்திருமுறை தினமுரை
பனிமலைஅரன் சனனமரண வினைபொடிசெயும் கதியவன்
புனிதமவனின் பதமெனுமலர் இணைதனைதுதி அருள்வனே.

February 8, 2010

கழல் அருளுமே!

தணலுருவினன் குணங்குறியிலன் அணைந்தருள்செயும் சிவனவன்
கணமவனுரு உணர்வதிலுறு துணைதருமுயர் மணியவன்
பிணமெரிநிண மணசுடலையில் இணையிலிநடம் புரிகுவன்
ரணமிகுஇரு வினைமுரணழி இணைகழல்பிணை அருளுமே!

February 6, 2010

அடியவர் விழைவரே!

சுடர்விழிநுதல் கரமதில்மறி மழுப்படையழல் துலங்கிட
மிடல்மிகுகொடு புலியதளுடை இடைதவழ்பட அரவமும்
படர்சடைமுடி விடமிடறுடன் துடிஉடுக்கையும் ஒலி பட
தொடரடியவர் பொடியணிபவன் நடமிடுபதம் விழைவரே!

திருநடம் நினைமினே!

சுதியிதம்செயும் இசைதவழ்ந்திடும் துதிபதிகமும் இனிதுற
நிதியெனும்தயை மிகுந்தருளினில் விதிசிதைந்திடத் தொலைத்திடும்
கதியதுதரும் பதம்பதிந்திடும் மனதளமதும் நிறைவுறும்
மதிநதியணி திகழ்விரிசடை பதிதிருநடம் நினைம்மினே!

February 2, 2010

கருணையின் வடிவே!




கருணையின் வடிவாய்க் கனியும் தாய்முன்
...கரம்தவழ் குழந்தை யாகினேன்
அருளொளிக் குளிராய் அணைக்கும் பார்வை
...அளித்திடும் இதத்தைக் காண்கிறேன்!
தருமுயர் அபயம் சதமாய்ச் சாற்றும்
...தயைநிறை கரங்கள் தோன்றுதே!
திருவடி யிணையில் திளைக்கும் உள்ளம்
...சிவையெனும் உமையைப் போற்றுதே!


(சில வருடங்களுக்கு முன் சந்தவசந்தத்தில் நான் எழுதியது)

(கருவிளம் மா மா தேமா
கருவிளம் மா கூவிளம்)
(1-- 3-- 5 மோனை)

February 1, 2010

இறைவனேஅருள்செய்வான்!

குவைநிதிவளர் கவினிளமையும் சுவைதருவதும் எதுவரை?
இவைஅவையென தினம்வருந்திடும் விதம்திரிவதில் பயனிலை!
சிவையவள்பதி சிவகுருதவ நிலைநினைவுகொள்! மயலறும்!
நவையுறுபவ வினையழிவழி வகையருள்செயும் இறைவனே!