January 31, 2010

முறைசெயும் நம திறைவனே!

குறைபிறைஉறை விரிசடையொளிர் நறைமலர்ச்சரம் அணிபவன்
மறையறைகழல் தொழும்சிறுவனுக் கருளமறலி உதைத்தவன்!
கறைமிடறுடை நடமிடுசிவன் உறுநரினுளம் நிறைபவன்!
சிறைஉறுபவ வினையறும்படி முறைசெயும்நம திறைவனே!


சிறை=தளை
உறுநர்=அடியார்

January 29, 2010

சிலம்பொலிகழல் பணிவமே!

(கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளம்)

அலைகடலிலும் புலர்விடிவிலும் அலர்மலரிலும் உறைபவன்
கலைநிலவெழில் பொலிஅலைநதி துலங்கிடவருள் இறையவன்
நிலைகுலைவுற மயலிருள்வினை தொலைந்திடவரு கதிரவன்
சிலையழகுமை உளமிலங்குவன் சிலம்பொலிகழல் பணிவமே!


விடிவு= விடியல்

January 12, 2010

ஏன்?

(நவம்பர்,2007,சந்தவசந்தக் கவியரங்கம்'ஏன்?'என்னும் தலைப்பில்
நான் எழுதியது)

'ஏன்'எனும் சொல்லில்தான் எத்தனை வீச்சுகள்!
தானதில் முன்நின்று தரும்ரசங்கள் எத்தனையோ!

பள்ளிகொண்ட பெருமானைப் பாடலிலே கவிராயர்
துள்ளிவரும் வெள்ளமெனத் தொடுத்தகவி ஏனில்தான்!

சுந்தராம்பாள் தேனிசையில் சுழன்றுவரும் என்ன என்ன?
கந்தனவன் ஆண்டியுரு கண்டுருகும் நிலையிலன்றோ?

ஏனென்ற கேள்விதனை இளமழலை கேட்கையிலே
தேனென்ற சுவை இனிக்கும் செவிநிறைக்கும் பரவசமாய்!

எதிர்பார்க்கும் ஆய்வுகளில் 'ஏன்'களால் வளர்ச்சியுறும்
எதிர்பாரா ஈகையியினில் 'ஏன்'களே உயர்வுபெறும்!

தத்துவ விசாரங்கள் சந்தேகம் எழுகின்ற
வித்துவ மேதமையில் விரிந்துயர்ந்த அறிவியலில்

சத்துவத் தவநெறியில் சழக்கிடும் வாதமதில்
நித்தியக் காட்சியினில் நெகிழ்மன சாட்சியினில்

கோபத்தின் வேகத்தில் குமுறுகின்ற துக்கத்தில்
தாபத்தில் தீர்க்கவொணாச் சதிபுரியும் விதியதனில்

இளமையின் நாதத்தில் எழுகின்ற கீதத்தில்
விளைகின்ற மனலயத்தில் தெறித்துவிழும் 'ஏன்'களே!

விளக்கிடும் இயற்கையில் விரைந்துசுழல் பருவங்களில்
உளத்தினில் எப்போதும் ஊடுருவும் 'ஏன்'தானே?

பயத்தினில் இயற்கையைப் பணிந்தவன் மனத்தில்'ஏன்'
வியந்திடப் புகுந்துடன் மிஞ்சிடவே சாதித்தான்!

இயற்கையின் நியதியில் இறைநீதிப் பேரிடரைச்
செயற்கரிய அறிவியலால் தவிர்க்கமுயல் சாதனங்கள்!

புதுமைக்கு மறுப்பில்லை புகுந்திருக்கும் உலகமயம்
எதுவரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தெரியவில்லை!

நவயுகத்தில் வருகின்ற நாகரிக நடைமுறைகள்
தவபலமாம் பண்பாட்டை தாக்காமல் இருந்திடட்டும்!

January 11, 2010

செஞ்சடை ஈசா!

செஞ்சடை ஈசா! எந்தாய்!
சஞ்சல மாகிய பவமிகு தளையற உன்றன்
அஞ்சலெ னக்கரு ளென்றே
தஞ்சம தேயளி மலரிணை சாற்றிடு மனமே!

பவம் = பிறப்பு

January 6, 2010

சிவன் பூங்கழல் !


விதிவழி வலியது மருளாய்!
பதிசிவ னதுபூங் கழலடி பரவிடு மனமே!
நதிமதி யணிவார் சடையன்
சதிஉமை யொடுதரு நடமிது சததம் நிறைவே!

('கந்த பத்யம்'எனும் அமைப்பில் இப்பாடல் அமைந்தது. சிவசிவாவுக்கு நன்றி)